யாழில் ஒருவருக்கு 10 வருடம் ஒத்திவைக்கப்பட்ட மூன்று வருட சிறை – நீதிமன்றம் அதிரடி!
ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு, 10 வருடம் ஒத்திவைக்கப்பட்ட மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
யாழ்.பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்தார் எனும் குற்றசாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
குறித்த வழக்கு விசாரணை நேற்று (செவ்வாய்க்கிழமை) நீதிவான் அந்தோணி சாமி பீற்றர் போல் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது, குற்றம் சாட்டப்பட்டவர் தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து, நீதிவான் அவருக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி அதனை 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்தார். அத்தோடு 10 ஆயிரம் ரூபாய் தண்ட பணமும் விதித்து உத்தரவிட்டார்.